சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் பிறப்புச் சான்றிதழ் வேண்டி, ஒவ்வொரு மாதமும், அதிகபட்சம் 200 முதல் 250 பேர் விண்ணப்பிப்பார்கள். தற்போது விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 800ஆக உயர்ந்துள்ளது என்கிறார்கள் அதிகாரிகள். அதாவது வழக்கமான எண்ணிக்கையைவிட இது மூன்று முதல் நான்கு மடங்கு அதிகம்.
சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை அலுவலகத்தில் பிபிசி தமிழ் செய்தியாளர் செலவிட்ட இரண்டு மணிநேரத்தில், பல இஸ்லாமியர்கள், ஒருவித பயத்துடன் தங்களது ஆவணங்களைப் பதிவுசெய்ய வந்துள்ளனர் என்பதை அறிய முடிந்தது. அரசு ஆவணங்கள் இல்லாதவர்கள் தடுப்பு முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் என்ற பீதியும் அவர்களிடம் ஏற்பட்டுள்ளது.
76 வயதான அப்துல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இதுவரை எந்த அரசு அலுவலகத்திற்கும் சென்றதில்லை என்றும் தனது மகன்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என்றும் வருத்தத்தோடு கூறினார்.
- "சாவதற்காக போராட வருபவர்கள், எப்படி உயிருடன் இருக்க முடியும்?" - யோகி ஆதித்யநாத்
- குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம்
''நான், என் அப்பா, முன்னோர்கள் என எங்கள் குடும்பம் நீண்டகாலமாக சென்னையில் வசித்துவருகிறது. ஆனால் என்னிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை. என் இளைய மகனுக்கு 40 வயதாகிறது. அவனுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க வந்தேன். என்னை முகாமுக்கு அனுப்பினால் பரவாயில்லை, என் மகன் அவன் குழந்தைகளோடு வாழவேண்டும். அவனுக்காக சான்றிதழ் வாங்கவந்தேன். என் மனைவியையும் அழைத்துவந்தேன்,''என்கிறார் அப்துல்.
அப்துல் மற்றும் அவரது மனைவி பிபிசி தமிழிடம் பேசும்போது, மூன்று மாத காலமாக நிம்மதி இல்லை என்றும் பயத்தில் இருப்பதாகவும் கூறினர். ''நான் முஸ்லிம். வாழ்நாளில் என் மத அடையாளம் ஒருபோதும் எனக்கு பிரச்சனையாக இருந்ததில்லை. குடியுரிமை திருத்த சட்டத்தால் எங்களை போல முஸ்லிம்களுக்கு பிரச்சனை என்கிறார்கள். பிறப்பு சான்றிதழ் இல்லாமல் வேறு என்ன ஆவணங்கள் கேட்பார்கள் என பலரிடம் விசாரித்து வருகிறேன்,'' என்றார் அப்துல்.